tamilnadu

img

கலிபாவிற்காகப் போராடிய மாபெரும் கிலாபத் இயக்கம் - என்.ராமகிருஷ்ணன்

1910ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1920ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்திய நாட்டின் அரசியல் வாழ்வில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. இதுதான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கிலாபத் இயக்கம். அதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு.  1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் உலக யுத்தம் துவங்கியது. இதில் இரண்டு அணிகள் மோதின. ஒரு அணி ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்தது. இதற்கு எதிரான அணி ஆஸ்திரியா ஹங்கேரி, ஜெர்மன் நாடு, ஆட்டோமான் பேரரசு என்ற துருக்கி, பல்கேரியா போன்ற நாடுகளாகும். பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட இந்த முதல் போர் 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று முடிவுற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஜெர்மன் அணி தோற்றது. இதன் விளைவாக ஜெர்மன் நாடு ஏராளமான நிலப்பகுதிகளை இழந்தது. வெற்றி பெற்ற இங்கிலாந்து நாட்டு அணி ஆட்டோமான் பேரரசு என்று அழைக்கப்பட்ட துருக்கி நாட்டை உடைத்து பல பகுதிகளாக்கி கைப்பற்றிக் கொண்டது. இங்கிலாந்து நாடு துருக்கியைப் பழிவாங்க வேறொரு காரியத்தையும் செய்தது. துருக்கி நாட்டின் தலைவரான கலிபாவை வீட்டுக் காவலில் வைத்தது. இது உலகம் முழுவதும் இருந்த முஸ்லிம் மக்களை கொதித்தெழ வைத்தது. ஏனென்றால் துருக்கி கலிபாதான் உலக முஸ்லிம்களின் தலைவர். கொந்தளித்தெழுந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் கலிபாவை அதிகாரத்தில் உட்கார வைப்பதற்காக, அவர் பொருட்டு ஆயுதமேந்திப் போராட தயாரானார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் துருக்கியை நோக்கி கலிபாவிற்காக யுத்தம் நடத்தச் சென்றன.  இந்தியாவிலும், கலிபாவிற்காக ஆயுதமேந்திப் போராட குழுக்கள் உருவாயின. அது பெரும் இயக்கமாகவே உருவெடுத்தது. இதுதான் புகழ்பெற்ற கிலாபத் இயக்கம்.  இச்சமயத்தில் இந்தியாவின் தேசிய இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வழிகாட்டி வந்த மகாத்மா காந்தி இந்த நிலைமையைக் கண்டு ஒரு முடிவெடுத்தார். தேசிய இயக்கத்தில் முஸ்லிம் மக்களையும் பெருமளவில் ஈர்க்க வேண்டுமென்று கருதி வந்த அவர், இப்பொழுது கிலாபத் இயக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவும் உண்டு என்று பகிரங்கமாக அறிவித்தார். இது இந்திய முஸ்லிம் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து இந்தியக் கிலாபத் குழுவின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் இயக்கம்- கிலாபத் இயக்கம் இரண்டும் சேர்ந்து தேசியப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகம் கொடுத்தது. ஏராளமான முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் இயக்கத்துடன் நெருங்கி வந்தனர்.  மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலிருந்தும் ஏராளமான முஸ்லிம் மக்கள் துருக்கியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இவர்கள் முகாஜிர்கள் என அழைக்கப்பட்டனர். அதாவது பிறந்தநாட்டைத் துறந்து பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் என்பதாகும். இவர்கள் துருக்கி செல்வதற்கு இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் சென்று, அங்கிருந்து துருக்கி நோக்கி செல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் முஸ்லிம் மன்னர் துருக்கி கலிபா மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.

துருக்கி செல்லும் போராட்டக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் அதேபோன்று துருக்கியிலிருந்து திரும்பும் ஒவ்வொரு போராட்டக்காரருக்கும் வழிச் செலவுக்காக ஒரு தங்கக் காசு கொடுப்பார்.  இவ்வாறு போராட்ட உணர்வு படைத்த இந்திய முஸ்லிம் மக்கள் ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்வதை அறிந்த மாஸ்கோவிலிருந்த கம்யூனிஸ்ட் அகிலத் தலைவர்கள் ஒரு ஏற்பாட்டைச் செய்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் முகாமிட்டனர். இந்த முகாஜிர்கள் காபூல் வழியாகச் செல்லும் போது அகிலத்தின் ஊழியர்கள் அவர்களைச் சந்தித்துப் பேசினர். பக்கத்தில் உள்ள ரஷ்ய நாடு லெனின் தலைமையில் புரட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. நீங்கள் அங்கே சென்றால், உங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும், நீங்கள் துருக்கி சென்று போராட ஆயுதங்கள் கொடுக்கும் என்று அவர்களுக்கு கூறி, ஒரு யோசனையையும் கொடுத்தனர். “நீங்கள் ஏன் முதலில் ரஷ்யா சென்று அங்கே ஆயுதப் பயிற்சி பெற்று துருக்கிக்குச் செல்லக்கூடாது, அவ்வாறு செய்தால் நன்றாகப் போராடலாமே” என்று ஒரு யோசனை கூறினர். அதையேற்ற பல முகாஜிர்கள் அதற்குச் சம்மதித்து ரஷ்யாவை நோக்கிப் பயணமாயினர். அவர்கள் செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அகிலத் தோழர்கள் செய்தனர். பின் அவர்கள் தாஷ்கண்ட் சென்று அங்கே அவர்களுக்காக துவக்கப்பட்டிருந்த ராணுவப் பயிற்சியில் பயிற்சி பெற்று சிறிது காலத்திற்குப் பின்னர் மாஸ்கோ கிழக்கத்தியப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றபின் அந்நாட்டின் தலைவரான லெனின் கீழ்திசை நாடுகளின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் திரட்டி அவர்களுக்கு ஏகாதிபத்திய - எதிர்ப்பு உணர்வையும், மார்க்சிய போதனையையும் அளித்து கம்யூனிஸ்டுகளாக்கி மீண்டும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று அங்கே மார்க்சியத்தைப் பரப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளை உருவாக்குவதற்காக ஒரு ஏற்பாடு செய்தார். ‘கீழ்த்திசை பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கி அங்கே இத்தகைய போராட்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு மார்க்சியத் தத்துவார்த்தப் பயிற்சியுடன் இதர பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இப்பொழுது இந்தியாவிலிருந்து சென்ற இந்த முகாஜிர்கள் அங்கே தங்கி பயிற்சி பெற ஆரம்பித்தனர். அவர்களுக்கு மார்க்சியம் மட்டுமல்ல, உலக வரலாறு, உலக நிலைமை, மக்கள் நிலைமை, ஏகாதிபத்தியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  

தேச விடுதலை, சோசலிசம் போன்றவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பல மாதங்களுக்கு அவர்கள் உலகைப் பற்றிய புதிய புரிதலுடன், மார்க்சிய தத்துவ தெளிவுடன், வர்க்கப் போராட்டம் என்பதுதான் மனித வாழ்வின் உந்துசக்தி என்ற புரிதலுடன், தங்கள் இந்திய நாட்டிற்குச் சென்று அங்கே மார்க்சியத்தைப் பரப்ப வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற உணர்வுடன் இந்தியாவிற்குள் திரும்பி வர ஆரம்பித்தனர். கலிபாவிற்காகப் போராடச் சென்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக தங்கள் பெஷாவர் மாகாணத்துக்கு திரும்பி வந்தனர்.  இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம் இந்த நிகழ்ச்சிப் போக்கைக் கண்டு ஆத்திரம் கொண்டது. ரஷ்யாவின் போல்ஷ்விக் கொள்கை இந்தியாவில் பரவி தங்கள் ஆட்சிக்கு சவால் விடும் என்று உணர்ந்த அந்த அரசாங்கம் மிகப் பெரும் தாக்குதலை இந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது தொடுத்து அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று திட்டமிட்டது. அதுதான் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கான பெஷாவர் சதிவழக்கு!